ரசிகராகவும் கலைஞராகவும் விளங்கிய ராமநாதன்!

- லலிதாராம் - எழுத்தாளர் -
23rd Dec, 2014

கச்சேரி மேடையில் சோபிக்கும் கலைஞர்கள் எல்லாருக்கும் சங்கீத இலக்கணத்தில் ஆழ்ந்த தேர்ச்சி இருக்கக் கூடும் என்று சொல்வதற்கில்லை. இலக்கண நூல்களில் ஆய்வாளர்களாக விளங்கு வோர் எல்லோரும், தேர்ந்த கச்சேரி வித்வான்களாக இருப்பதில்லை.

எஸ்.ராமநாதன்
செவ்வியல் இசையில் ஆய்வாளர் களை எடுத்துக் கொண்டால் சமஸ்கிருத நூல்களில் தேர்ச்சி உடைய வர்களுக்கு, பழந்தமிழ் நூல்களில் பரிச்சயம் இருப்பதில்லை. தமிழிசை ஆய்வு செய்வோருள் பலருக்கு வடமொழித் தேர்ச்சி இருப்பதில்லை. மேற்சொன்னவற்றை ஒருசேரப் பெற்றவர்களைப் பற்றி நினைக்கும் போதே, தோன்றும் முதல் பெயர், டாக்டர். எஸ்.ராமநாதன் (1917-1988).

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 'சங்கீத பூஷண' பட்டயப் படிப்பில் சேர்ந்ததன் மூலம், திருவையாறு சபேச அய்யர், டைகர் வரதாச்சாரியார் போன்ற ஜாம்பவான்களிடம், தன்னைப் பட்டை தீட்டிக் கொண்ட ராமநாதன், இளவயது முதலே இசை ஆய்விலும் முனைப்போடு செயல்பட்டு வந்தார். வாய்ப்பாட்டிலும் வீணையிலும் தேர்ந்து விளங்கிய அவரது கச்சேரி வாழ்க்கையோடு, ஆய்வு வாழ்க்கையும் இரண்டறக் கலக்க அவர் பணியாற்றிய பல்வேறு பல்கலைக்கழகங்கள் பெரிதும் உதவின.

கடந்த, 1950-களில் ராமநாதன் வெளியிட்ட,'சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்' என்ற நூல், பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னாளில், அமெரிக்கா வின், கனக்டிக்கட் மாகாணத்தில் உள்ள வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் இந்தத் தலைப்பிலேயே ஆய்வினைத் தொடர்ந்து, முனைவர் பட்டத்தினையும் பெற்றார். ஐ.நா., சபையில் அவருக்குக் கிடைத்த கச்சேரி வாய்ப்பை அவரது இசை வாழ்வின் உச்சங்களுள் ஒன்றாகக் கருதலாம்.

இந்தியா திரும்பிய ராமநாதன், கர்நாடக இசை பயிற்றுவிப்பவர்களுள் முதன்மையானவராக கருதப்பட்டார். அந்த நிலையிலும் தன்னை ஒரு முதல் நிலை மாணவனாகக் கருதி, புதியனவற்றை தினம் தினம் திரட்டித் தொகுத்தது அவரது சிறப்பம்சம். ராமநாதன் எவ்வளவுக்கு எவ்வளவு சிறந்த கலைஞரோ, அவ்வளவுக்கு அவ்வளவு சிறந்த ரசிகரும் கூட. '22 ஸ்ருதிகள், ராக லட்சணங்கள்' போன்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரைகள், சங்கீத விற்பன்னர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது என்றால் 'தியாகராஜருடன் ஒரு நாள்,

பாமரர்க்கு இசை' போன்ற தலைப்புகளில் அவர் கொடுத்த விரிவுரைகளை, சாதாரண ரசிகர்கள் இன்றளவும் நினைவில் வைத்துள்ளனர்.

பி.ராஜம் அய்யருடன் சேர்ந்து, சுப்பராம தீட்சிதரின், 'சங்கீத சம்பிரதாய பிரதர்சினி'யை தமிழாக்கம் செய்தார். பாரதியாரின் பாடல்கள், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து, கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் போன்ற பல தமிழ்ப் பாடல்கள் பாதுகாக்கப்பட்டு பரவ, ராமநாதன் எடுத்துக் கொண்ட முயற்சி அளப்பரியது.

எத்தனையோ பட்டங்கள் தேடி வந்து அலங்கரித்தபோதும், எந்தவித படாடோபமும் இன்றி, சீனிவாச சாஸ்திரி ஹாலில் அமர்ந்தபடி, முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இளைஞரை ஊக்குவிக்கும் ரசிகராய் இருப்பதையே பெரிதும் விரும்பினார். சிறந்த வாக்கேயக்காரராகவும் விளங்கிய ராமநாதனின் பெயர், இன்று அவருடைய நூல்களாலும், அவர் உருவாக்கிய மாணவர்களாலும் உயர்த்திப் பிடிக்கப்பட்டு வருகிறது.

Comments